ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியை டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் எனவும், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும், பிப்ரவரி 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் எனவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி, நாகாலாந்து மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி, மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.