'பழங்குடியின தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார்' – மணீஷ் சிசோடியா சாடல்!

துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பழங்குடியின தலைவர் போல் செயல்படுவதாக, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதலாக உள்ளது. பல்வேறு விவகாரங்களில், ஆளுநருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பேசியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உதவி மற்றும் ஆலோசனைக்கு துணை நிலை ஆளுநர் அல்லது நிர்வாகி கட்டுப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் எந்த விவகாரத்திலும் ஆளும் அரசை கலந்து ஆலோசிக்காமல் துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி, உள்ளாட்சி நிர்வாகத்தின் முடிவை மாநிலங்கள் தான் எடுக்க வேண்டும், மத்திய அரசு அல்ல. அரசியலமைப்புச் சட்டத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பிற்கோ துணை நிலை ஆளுநர் கீழ்படியவில்லை.

டெல்லி துணை நிலை ஆளுநர் ஒரு பழங்குடியின தலைவர் அல்ல. ஆனால் அவர்,அரசியலமைப்பு அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு கீழ்ப்படியாமல் செயல்படுகிறார். டெல்லி துணை நிலை ஆளுநர், தனது பெரிய முதலாளிகளை திருப்திப்படுத்த பழங்குடியின தலைவரைப் போல செயல்படாமல், அரசியலமைப்பைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டம் – ஒழுங்கு, டெல்லி காவல் துறை மற்றும் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பணியில் துணை நிலை ஆளுநர் தலையிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ” துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா எனது தலைமை ஆசிரியர் அல்ல,” என ஆவேசமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.