செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் அருகே சாஸ்திரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவரான இவர் நேற்று மாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் வீட்டிற்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்று உள்ளார்.
மணிகண்டன் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் கவனம் செலுத்திய நிலையில் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் பிரதீப் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த குழாய்க்கு அருகே மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்க்கில் பார்த்தபோது பிரதீப் செப்டிக் டேங்கில் விழுந்து மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பிரதீப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிநீர் பிடிப்பதற்காக சென்ற 6 வயது சிறுவன் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.