பங்குகளுக்கு ஈடாக பெற்ற ரூ.9000 கோடி கடனை முன்கூட்டி திருப்பி செலுத்த அதானி முடிவு

புதுடெல்லி: அமெரிக்கா ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, பங்குகளை அடமானமாக வைத்து பெற்ற கடனுக்கு முன்கூட்டியே ரூ.9000 கோடி தொகையை செலுத்த அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நாங்கள் ஏற்கனவே அளித்த உறுதிமொழியின்படி, சந்தையின் சமீபத்திய ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, பங்குகளை ஈடாக வைத்து பெற்ற கடனுக்காக நிதி நிறுவனங்களுக்கு முன்கூட்டியே ரூ.9000 கோடி செலுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் அடமான பங்கு கடன்களின் முதிர்ச்சி காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமாகும். ஆனால் இதற்கு முன்பாகவே அதானி குழுமம் தனது கடனை திருப்பி செலுத்துவதாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.