டெல்லி : ரயில் பயணிகள் வாட்ஸ்- அப் செயலியின் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே விரைவில் அனைத்து வழித்தடத்திலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை 2 கட்டங்களாக செயல்முறைப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில் இ – கேட்டரிங் பிரிவில் வாட்ஸ் -அப் சேவையை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண் அனுப்பிவைக்கப்படும்.
அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்தால், உணவு இருக்கைக்கே வந்துவிடும். வாட்ஸ்-அப் மூலம் உணவை பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளரின் கருத்துக்களின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதி அமல்படுத்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.