புது டெல்லி: நாட்டில் சிறிய மற்றும் புதிய நகரங்களில் டிஜிட்டல் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம், ஒரு ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசு மற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் ஒவ்வொரு இந்திய இளைஞர் வசிக்கும் இடமும், பங்கேற்பதை உறுதி செய்ய முடியும்.
இத்தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் இன்று தெரிவித்தார். மேலும் அவர், “இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பாகும்.
இது அரசின் முன்னெடுப்புகளை சிறிய நகரங்கள் உட்பட நாடு முழுவதும் கொண்டு செல்கிறது. மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின்படி, நாடு முழுவதும் 63 இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களிலும், பாண்டிச்சேரியிலும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.