தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி வெற்றி

சென்னை,

84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி (17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் தேவநாதன், டெக்னிக்கல் கமிட்டி தலைவர் கணேசன், எஸ்.டி.ஏ.டி. துணைத்தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

வருகிற 16-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான அணிகள் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் மராட்டிய அணி 3-0 என்ற கணக்கில் புதுச்சேரியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் அரியானா 3-0 என்ற கணக்கில் டாமன் டையு அணியையும், கர்நாடகம் 3-0 என்ற கணக்கில் உத்தரகாண்டையும், மேற்கு வங்காளம் 3-0 என்ற கணக்கில் அசாமையும், டெல்லி அணி 3-0 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன.

தமிழக அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தியது. தமிழக அணியில் காவ்யா ஸ்ரீ, ஹன்சினி ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித்தந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.