கோவை வெள்ளலூர் பகுதியில், ரூ.168 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அதிமுக ஆட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் தொடங்கின. சில மாதங்களிலேயே பணிகள் தொய்வடைய, ஆட்சி மாறியது.

திமுக ஆட்சியில் பணிகள் மேலும் தொய்வடைந்தன. கிட்டத்தட்ட 40 சதவிகித பணிகள் முடிந்த நிலையில், பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலிடத்துக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் பஞ்சாயத்து வெடித்தது. இதையடுத்து, “பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.” என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள கட்டுமானங்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் மாநகராட்சியின் பொறியாளர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், இந்த பேருந்து நிலையத்தை சுற்றி அதிமுக பிரமுகர்களுக்கு நிலம் உள்ளது. இதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மாநகராட்சி பொறியாளர், “பேருந்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அங்கு ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும்.” என்று கூறிடியிருந்தார். இதன் மூலம் வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி பொறியாளர் இளங்கோவனிடம் விளக்கம் கேட்டபோது, “நடவடிக்கையில் இருக்கிறது என்று தான் சொல்ல வந்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் இறுதி என ஆணையர் அதற்கு விளக்கமளித்துவிட்டார். அவரது விளக்கம் தான் இறுதியானது.”என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் கேட்டபோது, “வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. RITES என்கின்ற பொதுத்துறை நிறுவனம் இதுகுறித்து ஆய்வு செய்து சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அந்த அறிக்கை வருகின்ற மாமன்ற கூட்டத் தொடரில் முன் வைக்கப்படும். மாமன்றத்தில் எடுக்கும் முடிவு அரசுக்கு அனுப்பப்படும். அரசு தான் இறுதி முடிவை எடுக்கும்.” என்று கூறியுள்ளார்.