மகாராஷ்டிரா: 18,000 போலீஸ் பணியிடங்களுக்கு 7 லட்சம் பட்டதாரிகள் உட்பட 18 லட்சம் பேர் விண்ணப்பம்!

மகாராஷ்டிராவில் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து போலீஸ் பணிக்குப் புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அதிக அளவில் காலியிடங்கள் இருக்கின்றன. அதேசமயம் போலீஸாரின் தேவை என்பதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து, தற்போது 18,331 போலீஸ் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே மாநில அரசு இதற்காக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. மொத்தம் 18 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டதாரி இளைஞர்கள் ஆவர். போலீஸ் பணிக்கு 12வது வகுப்பு படித்திருந்தால் போதும். ஆனால் இப்பணிக்கு பட்டதாரிகளும், இன்ஜினியர்களும் அதிக அளவில் விண்ணப்பித்திருக்கின்றனர்.

மகாராஷ்டிரா காவல்துறை

போலீஸ் கான்ஸ்டபிள் மட்டுமல்லாது, டிரைவர்கள், ரிசர்வ் போலீஸ் படைக்கும் சேர்த்து ஆள் எடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது. மும்பைக்கு மட்டும் 8070 போலீஸார் தேர்வு செய்யப்படுகின்றனர். போலீஸ் பணிகளுக்குத் திருநங்கைகள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் திருநங்கைகளும் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது. இதையடுத்து 73 திருநங்கைகள் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

உடற்பயிற்சி தேர்வு

மும்பையிலுள்ள நைகாவ் மற்றும் மரோல் போலீஸ் மைதானத்தில் போலீஸாருக்கான உடற்தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இப்பணிகளைக் கவனித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி ஜெயக்குமார் இணை கமிஷனராகப் பணியாற்றி வருகிறார்.

அவரிடம் போலீஸ் தேர்வு குறித்துக் கேட்டதற்கு, “ஒரு லட்சம் பேரில் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றார்.

தமிழ் இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்திருக்கிறார்களா என்று கேட்டதற்கு, “மிகவும் சொற்ப அளவில் மட்டுமே விண்ணப்பித்திருக்கின்றனர். மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது மகாராஷ்டிராவில் குடியிருப்பு சான்று வைத்திருக்கும் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.