ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப்பந்து கால்பந்து போட்டிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் விளையாட்டு போட்டிகள் போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை நாணயம் சுண்டி விட்டு தொடங்கி வைத்தார். மேலும் ஒருவர் பந்து வீச உதயநிதி ஸ்டாலின் மட்டையை சுழற்றி கிரிக்கெட் பந்தை அடித்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆண்டுதோறும் கிரிக்கெட், கால்பந்து, இறகுப்பந்து போட்டிகளில் அரசு அதிகாரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ் கலந்து கொள்ளும் முதல் போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 1 1/2 மாதங்களாக விளையாட்டு அரங்குகளுக்கு சென்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். அதிகாரிகளுடன் கலந்து பேசி முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நல்ல அறிவிப்புகள் வரும் என்றார். மேலும் ஒடிசா மாநிலத்திற்கு சென்று விளையாட்டு மைதானங்களை பார்வையிட்டு முதல்வரிடம் கூறியுள்ளோம். இங்கும் நல்ல கட்டமைப்பு உள்ளது.
விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் அறிவிப்புகள் அறிவிக்கப்படும். தேர்தலில் செங்கல்லை கையில் வைத்து சுற்றி வந்தேன் செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள், ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற ஒரே கோரிக்கை மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு வேலையை ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் ஈரோடு தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ளது, வாக்கு வித்தியாசம் தான் எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.