“மக்களைக் குழப்புகிறார் பழ.நெடுமாறன்​​​​​” – மாணிக்கம் தாகூர் எம்.பி கருத்து

சிவகாசி: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கூறி பழ.நெடுமாறன் மக்களை குழப்புகிறார் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிவகாசி அருகே விளாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்கள் இடம்பெறவில்லை. சென்னை – கொல்லம் ரயில் சிவகாசியில் நிற்பதில்லை. தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

ராகுல் காந்தி பிரதமரானால் சிவகாசி முன்னேற்றம் அடையும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு ஆகிறது. மக்கள் சிறிது காலம் பொறுத்திருந்தால் சிவகாசிக்கு பல சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும்.

மேலும், மத்திய அரசு நிதி அளித்தால் தான் மாநகராட்சியில் கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஸ்திப்சிங் பூரியிடம் 15 மத்திய திட்டங்களின் கீழ் ரூ.250 கோடி நிதி கேட்டு மனு அளித்து 3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என துரை வைகோ மட்டுமல்ல நான் உட்பட பலர் விரும்புகின்றனர். அதற்கு கூட்டணி கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும். விருதுநகர் தொகுதியில் துரைவைகோ போட்டியிட்டால் வரவேற்பேன். 2019-ல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தவர் ஸ்டாலின். எங்களது கூட்டணியின் நோக்கம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கூறி பழ.நெடுமாறன் மக்களை குழப்புகிறார்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.