தமிழ் சினிமா என்னை மதிக்கவில்லை: சொல்கிறார் வரலட்சுமி

சரத்குமார் மகள் வரலட்சுமி 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்தபோதும் முன்னணி நடிகை என்ற இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக வில்லி கேரக்டர்களில் வெழுத்து வாங்குகிறார். அவருக்கென்னு அங்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமா என் திறமையை மதிக்கவில்லை. நல்ல கலைஞர்களை தவறவிடுகிறது என்று கூறுகிறார். வரலட்சுமி தற்போது தமிழில் 'கொன்றால் பாவம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த வரலட்சுமி கூறியதாவது:

இந்த படத்தில் நடிக்க 2 வருடங்களுக்கு முன்பே ஒப்புக் கொண்டேன். அவ்வளவு அருமையான கதை. எனது கேரியரில் வித்தியாசமான படமாக இருக்கும். நான் அதிக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களுக்குத்தான் முக்கியத்தும் கொடுக்கிறேன் என்கிறார்கள். தமிழில் வாய்ப்பு வந்தால்தானே நடிப்பதற்கு. நானே படம் தயாரித்து, நானே நடித்துக் கொண்டிருக்க முடியுமா? தெலுங்கில் வாய்ப்புகள் வருகிறது நடிக்கிறேன். அதிக படங்களில் நடிப்பதால் ஐதராபாத்திலேயே செட்டிலாகி விட்டேன். ஒரு நடிகையாக எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்குதானே இருக்க முடியும்.

தமிழ் சினிமாவில் 9 வருடங்களாக கிடைக்காத புகழும், அங்கீகாரமும், அன்பும் தெலுங்கில் கிடைத்தது. 'க்ராக்' படத்தில் 'ஜெயம்மா' என்ற கேரக்டரில் நடித்தேன். ஆந்திர ரசிகர்கள் என்னை ஜெயம்மா என்று கொண்டாடுகிறார்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என் திறமையை மதித்து வாய்ப்பு தருகிறார்கள்.

தமிழில் 'தாரை தப்பட்டை' படத்தில் உயிரை கொடுத்து நடித்தேன். அதற்கு பிறகு எனக்கு வாய்ப்பு குவிந்திருக்க வேண்டும், சர்கார் படத்திற்கு பிறகாவது வாய்ப்பு குவிந்திருக்க வேண்டும் ஆனால் நடக்கவில்லை. ஆனாலும் என்னை வளர்த்த தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் அன்பு உண்டு. இங்கு வாய்ப்புகள் குவிந்தால் இங்கும் அதிக படங்களில் நடிப்பேன். மீண்டும் சென்னைக்கே குடி வந்து விடுவேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.