நாகர்கோவில் காசி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த காசியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27). இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள், படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.

இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதானார். சிறையில் உள்ள நிலையில் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், காசியின் லேப்டாப்பில் இருந்து 120 பெண்கள், 400 ஆபாச வீடியோக்கள், 1900 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் சில பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது.

இந்த வழக்கில் சிறுமிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர். 17 வயது சிறுமி ஒருவர் சாட்சியளித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் காசிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதையடுத்து காசி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.