கரூர்/புதுக்கோட்டை: கரூர் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தோளூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின விழா குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கின.
இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 15 பேர் நேற்று தோளூர்பட்டி சென்றனர். அவர்களை அதே பள்ளியின் ஆசிரியர்கள் ஜெபசகேயுஎப்ராகிம், சி.திலகவதி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் முன், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைப் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு, காவிரி ஆற்றில் குளிப்பதற்காக மாணவிகள் இறங்கி உள்ளனர். அப்போது மாணவிகள் அடுத்தடுத்து நீர்ச் சுழலில் சிக்கி மூழ்கினர்.
3 பேரை மீட்ட மாணவி: இதில், கீர்த்தனா என்ற மாணவி, 3 மாணவிகளை மீட்டார். எனினும், ஆர்.தமிழரசி(13), எம்.இனியா(11), பி.லாவண்யா(11), வி.சோபியா(12) ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்த மாயனூர் போலீஸார் மற்றும் முசிறி, கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாணவிகளை தேடிய நிலையில், தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகியோரின் சடலங்களை மீட்டனர்.
சம்பவ இடத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட எஸ்.பி. ஏ.சுந்தரவதனம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்து பெற்றோர்கள், பொதுமக்கள் பிலிப்பட்டி பள்ளியில் திரண்டு கதறி அழுதனர். மேலும், ஆசிரியர்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டதால்தான், மாணவிகள் உயிரிழந்ததாகக் கூறி, அங்கிருந்த ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்று விசாரணை செய்தனர்.
பின்னர், கவனக்குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், சி.திலகவதி ஆகியோரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சாமி முத்தழகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர், கரூர் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, இலுப்பூரிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடைபெற்றது. பின்னர், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: இந்நிலையில், பள்ளி மாணவிகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.