”ஒட்டுமொத்த அரசாங்கமும் இடைத்தேர்தலில் இருக்காங்க; அப்படினா மக்கள் பணி?” – வானதி சீனிவாசன்

தமிழக அரசு ஈரோடு இடைத்தேர்தல் பணிகளில் முடங்கி உள்ளது எனவும், அரசு பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் கோவையில் சமீபத்தில் நடைபெற்ற கொலை சம்பவங்கள், ஈரோடு இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, திமுக ஆக்கிரமிப்பு மன்றங்களை அகற்றுவதில்லை, சிவானந்த காலணியில் இந்த பிரச்சனை உள்ளது என தெரிவித்தார்.
“ஆக்கிரமிப்பு என்றால் கோயில்களை தான் இடிக்கின்றனர். இதனை நாங்கள் தொடர்ச்சியாக பொறுத்துக் கொள்ள முடியாது. கோவை மாநகராட்சியில் தற்போது வரை சாலை நிலைமை மாறவில்லை. நல்ல சாலைகளை அமைக்க மீண்டும் கோரிக்கை வைக்கிறேன். மாநகராட்சி அழகான சித்திரங்களை மேம்பால தூண்களில் வரைகின்றனர். சென்னையிலும் இது போன்ற ஓவியங்கள் வரைகின்றனர், பாராட்டுக்கள்” என அவர் கூறினார்.
image
கோவையில் தவறான சித்திரங்கள் இருந்தால், உண்மை தன்மைக்கு மாறாக இருந்தால் மாற்றி அமைக்க வேண்டும். நகர அழகை மாநகராட்சி மேற்கொள்ளும் போது சிதைக்கும் வகையில் யாரும் ஈடுபடக் கூடாது. உண்மையான கோரிக்கை இருந்தால் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும், “இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசாங்கமும் உட்கார்ந்து கொண்டுள்ளது. தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி அரசு பணிகளை கோட்டை விட்டுள்ளது. கோவையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பாக உள்ளது. அமைச்சர் கல் எடுத்து அடிப்பது, நிர்வாகிகள் ஓப்பன் சேலஞ்ச் விடுவது ஆகியவை கட்சியை சேர்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் உள்ளது” என அவர் விமர்சனம் செய்தார்.
image
அரசு எந்திரம் முடங்கி போகும் அளவிற்கு தேர்தல் பணி நடைபெறுகிறது. பணம் வாங்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சீரியஸாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொலை தொடர்பாக கைது நடவடிக்கை உடனடியாக எடுத்தது நல்ல விஷயம், ஆனால் தடுக்க வேண்டியது அவசியம் எனவும், குற்றம் நடப்பதற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார். சினிமா பாணியில் சட்டம்-ஒழுங்கு சென்று கொண்டு இருக்கிறது எனவும், ரவுடிகளுக்கு பயம் இல்லாமல் போகிறது எனவும் வானதி சீனிவாசன் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.