பெண் குழந்தைக்கு தந்தையானார் மின்னல் முரளி இயக்குனர்

மலையாள திரையுலகில் இளம் வயதிலேயே டைரக்சன், நடிப்பு என வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருபவர் இயக்குனர் பசில் ஜோசப். குஞ்சிராமாயணம், கோதா என கவனிக்கத்தக்க படங்களை கொடுத்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் முதன்முறையாக சூப்பர்மேன் கதை அம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படத்தை இயக்கி பாலிவுட் வரை பலரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அது மட்டுமல்ல கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப கதையம்சத்துடன் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தில் ஆணாதிக்கம் கொண்ட கணவன் கதாபாத்திரத்தில் எதிர்மறை கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அழகான பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் பசில் ஜோசப். மருத்துவமனையில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் பசில் ஜோசப்

கடந்த 2017ல் தனது நீண்ட நாள் காதலியான எலிசபெத் என்பவரை திருமணம் செய்தார் பசில் ஜோசப். ஆறு வருடங்கள் கழித்து தங்களது வாழ்க்கையில் ஒரு வசந்தமாக இந்த பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பசில் ஜோசப், தனது மற்றும் தன்னுடைய மனைவியின் பெயர் இரண்டையும் சேர்த்து, தனது மகளுக்கு ஹோப் எலிசபெத் பசில் என்கிற பெயரையும் உடனடியாக சூட்டி விட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.