கூடலூர் வனப்பகுதியில் டெட்டனேட்டர் வெடித்ததில் பரவிய காட்டுத் தீ: அதிகாரிகள் ஆய்வு

கூடலூர்: கூடலூர் நாடுகாணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் 5 ஏக்கர் பரப்பளவுக்கு புல்வெளிகள் எரிந்து சாம்பலானது. காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிப்பொருள் வெடித்தது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பந்தலூர் வனச்சரகம் தேவாலா பிரிவு நாடுகாணி காவல்பகுதிக்குட்பட்ட கைதக்கொல்லி வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால், காட்டுத்தீயை அணைக்க பந்தலூர் சரகர் ஏ.சஞ்சீவி மறறும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அப்பகுதியில் வெடி சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் வெடி சத்தம் ஏற்பட்ட இடத்துக்கு சென்று, வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் வெடிப்பொருள் வெடித்திருந்தது தெரிய வந்தது. வெடிப்பொருட்கள் தீயில் எரிந்த நிலையில் அப்பகுதியில் இருந்ததால், உடனடியாக மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் போரில் தேவாலா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேவாலா டிஎஸ்பி செந்தில் தலைமையில் ஆய்வாளர் திருஞானசம்பந்தம் மற்றும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கருப்பசாமி தலைமையில் வனத்துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறும் போது, “பாறைகளை உடைக்க உபயோகப்படுத்தும் டெட்டனேட்டர்கள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் டெடனேடட்ர்கள் எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள புல்வெளிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. வனத்தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.