பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை கத்தியால் தாக்கி கொல்ல திட்டமிட்ட பேஸ்புக் குழு உறுப்பினர்கள் மூவரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பீங்கான் கத்தியால் தாக்க திட்டம்
பேஸ்புக் சமூக ஊடகத்தில் Barjols என்ற பெயரில் செயல்படும் குழு உறுப்பினர்களே இந்த தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்தவர்கள்.
2018ல் முதல் உலகப் போர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட இமானுவல் மேக்ரானை பீங்கான் கத்தியால் தாக்கி காயப்படுத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது.
@AFP
இதில் 66 வயதான Jean-Pierre Bouyer என்பவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மொசெல்லே பிராந்தியத்தில் 2018 நவம்பர் 6ம் திகதி Jean-Pierre Bouyer உட்பட நால்வர் கைதாகினர்.
இவரது வாகனத்தில் இருந்தும் குடியிருப்பில் இருந்தும் ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றினர்.
இவருடன் கைதான இருவருக்கு குறைந்த நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் Barjols குழு உறுப்பினர்கள் 9 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடும் விமர்சனங்கள்
ஆனால் இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்ட நாள் தொடங்கி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் கற்பனையான வன்முறைகள் எவ்வாறு குற்றவியல் நடவடிக்கையாகும் என கேள்வி எழுப்பப்பட்டது.
@AP
இருப்பினும், தொடர்புடைய குழு உறுப்பினர்களின் கடுமையான மேக்ரான் வெறுப்பும், அரசின் தற்போதைய கொள்கைகளால் உள்நாட்டு கலவரம் மூளலாம் என்ற அச்சமும், புலம்பெயர்வோர் தொடர்பான கவலையும் நீதிமன்றத்தில் விரிவான விசாரணைக்கு இலக்கானது.
தண்டனை அறிவிக்கப்பட்ட மூவரும் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.