கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சைலேஷ். இவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை நேரடியாக அணுகினார்.
அங்கு ஆவடி பகுதியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த சையத் மின்ஹாஜுதீன் உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்கள் சைலேஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.3 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.
அதன்படி சைலேசும் பணத்தைக் கொடுத்துள்ளார். இருப்பினும், சையத் சொன்னபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் சைலேஷ், தனியார் அலுவலகத்திற்கு நேரில் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்ததன்னால், சைலேஷ் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று போலீசார் பண மோசடி செய்தது தொடர்பாக சையத் மின்ஹாஜுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு நிறுவனத்தை நடத்தியது தெரியவந்தது.
மேலும், அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் உள்ளவர்களிடமும் ரூ.91 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கைதான சையத் மின்ஹாஜுதீனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.