நடிகை ரியாவின் போதை பொருள் வழக்கு: 6 பேரின் குரல் மாதிரிகளை சோதிக்க கோர்ட் அனுமதி

மும்பை: நடிகை ரியா சக்ரபோர்த்தி தொடர்பான போதை பொருள் வழக்கில் 6 பேரின் குரல் மாதிரிகளை சோதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரண சம்பவ வழக்கை போலீசார் விசாரித்த போது, பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களுக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்புகள் அம்பலமாயின. இவ்வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், தர்மா புரொடக்‌ஷனின்  முன்னாள் நிர்வாக தயாரிப்பாளரான க்ஷிதிஜ் ரவி பிரசாத் உட்பட 33 பேர் மீது வழக்குபதியப்பட்டது.

அவர்களுக்கு எதிராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல்  செய்துள்ளனர். பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் ரியாவின் சகோதரர் மூலம் பலருக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்ட 6 பேரின் குரல் மாதிரிகளை சோதிக்க அனுமதிக்க கோரி கடந்த 2 ஆண்டுக்கு முன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனுஜ் கேஷ்வானி, ஜினேந்திர ஜெயின், க்ஷிதிஜ் ரவி பிரசாத், சங்கேத் படேல் உள்ளிட்ட 6 பேரின் குரல் மாதிரிகளை சோதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.