சிவசேனா கட்சி, சின்னம் பெற ரூ.2,000 கோடி பேரம்? உத்தவ் ஆதரவு எம்பி பகீர் தகவல்

மும்பை: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை பெற ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியின் ஆதரவு எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிதான், உண்மையான சிவசேனா மற்றும் வில்அம்பு சின்னத்தை பயன்படுத்த தகுதிபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினர் ஏற்கவில்லை. இதுகுறித்து உத்தவ் அணியின் ஆதரவு எம்பி சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள பதிவில், ‘வில்அம்பு சின்னத்தை பெறுவதற்காக ரூ.2,000 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது.

ரூ.2,000 கோடி என்பது உண்மையான தகவல்; இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது; அதனை விரைவில் வெளியிடுவேன். ஆளும் ஆட்சிக்கு நெருக்கமான பில்டர் ஒருவர், இந்த தகவலை என்னிடம் தெரிவித்தார். எம்எல்ஏவை விலைக்கு வாங்க ரூ.50 கோடி, எம்பியை விலைக்கு வாங்க ரூ.100 கோடி, கவுன்சிலரையும், கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்க ₹1 கோடி வரை பேரம் பேசுகின்றனர். அவ்வாறு இருக்க, சிவசேனா கட்சி சின்னம் மற்றும் கட்சியின் பெயரை வாங்க அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.