தமிழகத்தின் கரூர் மாவட்டத்தின் அருகே கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் மாரடைப்பு
இளம் வயதிலே மாரடைப்பால் பலரும் மரணிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக இது இன்னும் அதிகரித்துள்ளது.
முக்கியமாக விளையாட்டு வீரர்கள் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரழக்கிறார்கள். இதற்கு தற்காலத்து உணவு முறை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்குமென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கொரானாவிற்கு பிறகு இந்த மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கரூரில் நடந்த சோகம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூர் கிராமத்தில் நேற்று கபடிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் கபடி ஆடிய கணக்கப்பிள்ளையூரை சேர்ந்த 28 வயது மாணிக்கம் என்ற இளைஞர் ரைட் செல்லும் போது திடீரென கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த அவரை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணிக்கத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது இழப்புக்கு மாரடைப்பு தான் காரணமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணிக்கத்தை இழந்த அவரது குடும்பமும், மாணிக்கத்தின் நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் இது போன்ற மரணம் இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.