சிவகாசி: “ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக-வின் தோல்வி கண்முன்னே நிற்கிறது'' – மாணிக்கம் தாக்கூர்

சிவகாசி மாநகராட்சி அம்மன்கோவில்பட்டி மேல்நிலைப்பள்ளியில் மத்திய கல்வி நிதியில் அமைக்கப்படும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் பணியை விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மேயர்சங்கீதா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அதன்பின் மாநகராட்சி 43-வது வார்டு அம்மன்கோவில்பட்டி தெருவில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போர்வெல்லுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், “சிவகாசி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் ரூ.1,000 கோடி நிதி கிடைத்து, மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும். இதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.

மாணிக்கம் தாக்கூர்

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்து கொண்டார். ஈரோடு இடைத்தேர்தலில் கொள்கை அடிப்படையில் காங்கிரசுக்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார். சிவகாசியில் மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்துக்கு தலைமை அதிகாரி நியமிக்கப்படாதது கண்டிக்கதக்கது. ரயில்வே திட்டங்கள், பட்டாசுத் தொழில் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு சிவகாசியை புறக்கணித்து வருகிறது. தி.மு.க. அரசு 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. புதுமைப்பெண் உள்ளிட்ட சொல்லாத பலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க.வின் தோல்வி கண்முன்னே நிற்கிறது. இடைத்தேர்தல் வெற்றியென்பது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும்” என்றார்.

இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய மாணிக்கம் தாகூர் எம்.பி.யை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு சுகாதார வளாகம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அவர், “எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படவிருக்கிறது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.