ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும் என்று, வெங்கடேசன் எம்.பி.,க்கு ஆளுநர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
“தமிழக மக்கள் எங்களைப் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு ஆளுநர்களாக நியமனம் செய்துள்ளது” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் பேசி இருந்தார்.
இதற்க்கு மதுரை எம்பி வெங்கடேசன், “ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே” என்று பதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெங்கடேசன் எம்.பி.,க்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமில்லை. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்.
டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.
தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம், அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே.
நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்,
நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்,
இறுமாப்பு வேண்டாம்…
ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்…
அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை…
மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.