எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு இல்லை; ஓபிஎஸ் தரப்பின் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாலளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இந்த பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அனைத்து அரசியல் அஸ்திரங்களையும் எடுத்து வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இப்போது அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், இன்னும் சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை நம்பிக்கையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த பொழுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என விளக்கமளித்துள்ளனர். இதனால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது இன்னும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை, அதுதொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் இருக்கின்றன என்றும் விளக்கம் அளித்துள்ளார். சிவில் வழக்கு தீர்ப்பு அடிப்படையில் மட்டுமே அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.