சென்னை: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சிட்டாக சிறகடித்து பறந்து சென்றுள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் மொபைல் கேம். இதனை அந்த கேமை வடிவமைத்து, வெளியிட்ட ரோவியோ என்டர்டெயின்மென்ட் உறுதி செய்துள்ளது. “இன்று முதல் ரோவியோ கிளாசிக்ஸ்: ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அன்லிஸ்ட் செய்யப்படுகிறது” என ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ தொடங்க ஆரம்ப நாட்களில் ‘ஆங்கிரி பேர்ட்ஸ்’ கேம் அதில் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டென்ஷன் இன்றி சிங்கிள் பிளேயர் மோடில், கேஷூவலாக விளையாடி மகிழ்ந்த கேம் இது.
2009-ல் அறிமுகமான கேம். பின்லாந்து நாட்டை சேர்ந்த ரோவியோ என்டர்டெயின்மென்டின் உருவாக்கம் இது. கவண் கொண்டு பறவைகளை அதில் வைத்து சுற்றித்திரியும் பன்றிகளை தாக்க வேண்டும். இதுதான் கேம் பிளான். உலக அளவில் ஒரு கலக்கு கலக்கிய இந்த கேம் சுமார் 4 பில்லியன் டவுன்லோடுகளை கடந்து அசத்தியது.
இந்த சூழலில் இந்த கேமை பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து அன்லிஸ்ட் செய்வதாக ரோவியோ தெரிவித்துள்ளது. மொபைல் கேம் பிரியர்களின் மாறிவரும் விருப்பங்கள் மற்றும் புதிய மொபைல் கேம்களின் வருகை முதலியவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் வெர்ஷன் பிளேஸ் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு பயனர்கள் இனி தங்கள் சாதனங்களில் இந்த கேமை டவுன்லோட் செய்ய முடியாது. இருந்தாலும் ஏற்கனவே டவுன்லோட் செய்துள்ளவர்கள் தொடர்ந்து இதனை விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் பிற பதிப்புகளை பயனர்கள் தடையின்றி டவுன்லோட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please read below for an important announcement regarding the availability of Rovio Classics: Angry Birds. pic.twitter.com/a4n4bU5gQJ