உக்ரைன் போரில் சீனா ரஷியா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை – அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 367-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

அதேவேளை, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் அது அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் நேரடி எதிர்ப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைன் போரில் சீனா ரஷியா பக்கம் சாய்வது குறித்து உங்களுக்கு கவலை உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிபர் பைடன், போரில் சீனா ரஷியா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இதுவரை எதுவும் இல்லை’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.