பொய் வழக்குப் பதிவு செய்து மனித உரிமை மீறல்: காவலர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ப்ரவீன் பாபு என்பவர் தனது நண்பர் அசோக் உடன் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் பாலு, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ப்ரவீன் பாபுவை தாக்கியுள்ளார்.

இதனை ப்ரவீனின் நண்பர் அசோக் மொபைல் வீடியோ எடுத்ததால் ஆத்திரமடைந்த காவலர் பாலு அசோக்கையும் தாக்கியுள்ளார். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்த சென்ற காவலர் பாலு மேலும் மூன்று காவலர்களுடன் இணைந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் இருவரும் கடுமையாக காயமடைந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ப்ரவீன் பாபு மற்றும் அசோக் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தனர்.

வழக்கை விசாரித்த ஆணையம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டு இந்த தொகையை நான்கு காவலர்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது. மேலும் நான்கு பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.

இதனை எதிர்த்து காவலர்கள் நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுப்பட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளதால் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.