குட் நியூஸ்..!! ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு..!!

தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒன்று குண்டு வடிவ மிளகாய். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான சாகுபடி செய்து வருகின்றனர். அதன் செழுமையான சுவை நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காரத்தன்மை அதிகம் கொண்ட குண்டு மிளகாய் சாகுபடியில் இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பதால் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்பது மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. கமுதி, பரமக்குடி, முதுகுளத்துார், கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் அதிகளவில் மானாவாரியாக குண்டுமிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 400 கிலோ மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது.மாவட்டத்தில் 5000 ஏக்கரில் இறவை சாகுபடியில் நீர் பாய்ச்சி சாகுபடி செய்யப்படுகிறது. இவர்களுக்கு ஏக்கருக்கு 1000 கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக அதிகளவிலும், பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, துாத்துக்குடி, விருதுநகரில் குண்டு மிளகாய் சாகுபடியாகிறது.’ராமநாடு முண்டு’ எனப்படும் குண்டு மிளகாய் சாகுபடியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அதிகளவு செல்கிறது. கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.குண்டுமிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன.

குண்டுமிளகாய் பொடி உணவு பயன்பாட்டிற்கும்,மிளகாய் எண்ணெய் தயாரித்து மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும், என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் புவியியல் பொருட்களின் அடையாளங்களை பாதுகாக்கும் விதமாக 1999ல் புவிசார் குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு 2003 செப்.,ல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை, சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதலை தடுக்க முடியும்.

இந்தியாவில் 420க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன.மதுரை மல்லி, மதுரை சுங்குடி சேலை, காரைக்குடி கண்டாங்கி சேலை, காஞ்சிபுரம் பட்டு, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பழநி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய் இந்த பட்டியலில் உள்ளன. தற்போது ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.