திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் பம்ப் போடப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட இந்த குடிநீர் பம்பை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பயன்படுத்திக் கொண்டு வேறு யாருக்கும் தண்ணீர் விடாமல் சொந்தம் கொண்டாடி வந்துள்ளனர்.
இதனால் பாதிப்புக்குள்ளான அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவகத்திற்குச் சென்றனர்.
இதைப்பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த பெண்களிடம், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறி பேச்சு வார்த்தை ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் அனைவரும் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.