கடந்த மாதம் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல அரசியல் காட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இந்த பிரமாண்ட வெற்றியை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பாலம் அருகில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
அங்கு மேளதாளத்துடன் நாட்டு வெடிகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அப்போது, வெடி ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன் தலையில் விழுந்து வெடித்தது. இதனால், அவரது தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் தலை தெறிக்க ஓடினார்கள். அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்த தாமரைச்செல்வனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.