புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்த தையல் கலைஞர் சுந்தர்ராஜ். இவரின் மனைவி தனியார் பள்ளி ஆசிரியை சாந்தி(எ)சசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் புஷ்பராஜ் லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் சமூகவியல் முதலாமாண்டும், இளையமகன் கிஷோர் ராஜன் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பும் படித்து வந்தனர். அதேபோல சுந்தர்ராஜின் அண்ணன் ராஜாவின் மகன் ஷோபன்ராஜ் கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரியில் EEE 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சாந்தி மற்றும் அவரின் மகன்கள் புஷ்பராஜ், கிஷோர்குமார் மற்றும் சுந்தர்ராஜின் அண்ணன் மகன் ஷோபன்ராஜ் ஆகியோர் பிள்ளையார்குப்பம் வள்ளுவர்மேடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் அருகில் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அனைவரும் கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை புஷ்பராஜ், கிஷோர்ராஜன் மற்றும் ஷோபன்ராஜ் ஆகிய மூவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.. இதனை கண்ட சாந்தி கூச்சலிடவே, கரையில் நின்றிருந்தவர்கள் கடலில் இறங்கி அங்கு தத்தளித்துக்கொண்டிருந்த சோபன்ராஜ், கிஷோர்ராஜன் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் புஷ்பராஜ் மாயமானார். உடனே மீட்கப்பட்ட இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். இது பற்றி கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் கடலில் மாயமான புஷ்பராஜை உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிலமணி நேரங்களுக்குப் பிறகு அவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அதையடுத்து 3 பேரின் உடல்களையும் கைபற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாந்தியிடம் புகாரை பெற்ற கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண்முன்னே மகன்கள் 3 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.