மக்களவைத் தேர்தல் 2024: எடப்பாடி போடும் பக்கா ஸ்கெட்ச்: பாஜகவுக்கே பாடம் எடுக்க திட்டம்!

தமிழ்நாடு பாஜகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில்

முன்னிலையில் இணைந்து வருகின்றனர். சிடிஆர் நிர்மல் குமார், திலீப் கண்ணன், ஜோதி என கட்சியில் பிரபலமானவர்கள் வெளியேறி அதிமுகவில் இணைந்திருப்பது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளியேறும் அத்தனை பேரும் அண்ணாமலை மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வார் ரூம் அமைத்து சொந்த கட்சியினரையே வேவு பார்க்கிறார் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அண்ணாமலையால் ஓரங்கட்டப்பட்டவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களும் இதே கருத்தை கூறிவரும் நிலையில் பாஜக டெல்லி தலைமை இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவிலிருந்து விலகுபவர்கள் நேராக அதிமுகவை நோக்கி செல்வதும், எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்பதும் தமிழ்நாடு அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது. அத்துடன் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், அதற்கு அதிமுக இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் முதல் சமூக வலைதளங்களில் இயங்கும் அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இரு தரப்பும் பொது வெளியில் மோதிக் கொள்ளத் தொடங்கியிருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் ஏன் இந்த முரண்பாடுகள் என்று அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

“மக்களவைத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு அசைவிலும் உள் நோக்கம் இல்லாமல் இருக்காது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஒரு தொகுதியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது. பிற இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

தற்போது திமுக இன்னும் வலிமையுடன் இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவிற்கான பாரம்பரிய வாக்குகளும் விழாமல் போய்விடும். அத்துடன் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரையும் இணைக்கச் சொல்லி பாஜக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி பாஜகவை கழற்றிவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கவே கட்சிகள் விரும்புவார்கள். பாஜக இல்லையென்றால் திருமாவளவன் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தம்முடன் வர விரும்பும் கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கலாம். தேர்தலுக்குப் பின்னர் கூட பாஜக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வரவே வாய்ப்புகள் உள்ளன. பாஜகவும் எடப்பாடி பழனிசாமியின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.