அதிமுக – பாஜக கூட்டணி என்னவாகும்? சிக்னல் கொடுத்த கோவில்பட்டி சம்பவம்!

தமிழ்நாடு அரசியலில் அதிமுக – பாஜக இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவில் சேருவது அடுத்த பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளது. இதை கண்டித்து பாஜகவில் இருந்து எதிர் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

கோவில்பட்டி சம்பவம்குறிப்பாக அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி முன்வைத்த கருத்துகளுக்கு அதிமுகவில் இருந்து எதிர் வினைகளும் வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கண்டனம்அதாவது, கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பதை கண்டித்தும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
​​
வைரலாகும் போஸ்டர்கள்மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், எங்கள் முதல்வர் அண்ணாமலை, எடப்பாடி ஒரு துரோகி போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் அதிமுக – பாஜக இடையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அச்சாரம் போட்ட ஈரோடுதற்போதைய சூழலில் வார்த்தை போர் முற்றி வீதிக்கு வந்துவிட்டதையே பார்க்க முடிகிறது. உருவ பொம்மை எரிப்பு, உருவ படத்தை எரிப்பது எல்லாம் அரசியல் ரீதியாக அவமானகரமான விஷயங்கள். அதிமுக – பாஜக இடையிலான விரிசல் என்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்தே தொடங்கி விட்டது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில் அண்ணாமலையின் நடவடிக்கைகள் இருந்தன.
முறிகிறதா கூட்டணி?இந்த சூழலில் கோவில்பட்டியில் எடப்பாடியின் உருவப் படம் எரிப்பு என்பது பாஜகவின் கீழ்மட்ட அளவிலும் எதிர்ப்பு மனநிலை ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது. இதன்பிறகு தேர்தல் கூட்டணி அமைந்தாலும் தொண்டர்கள் மத்தியில் இணக்கமான போக்கு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே கோவில்பட்டி சம்பவத்தை கூட்டணி முறிவிற்கு அச்சாரமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மக்களவை தேர்தல் 2023இதேபோன்ற சூழல் 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவும் ஏற்பட்டது. பொன்னையன் உள்ளிட்ட பலர் பாஜகவை விமர்சனம் செய்தனர். இருப்பினும் சில முரண்பாடுகளுக்கு மத்தியில் கூட்டணி அமைந்தது. ஆனால் முடிவு என்பது படுதோல்வி.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணி வென்றது. எனவே 2023 மக்களவை தேர்தலுக்கு முன்பாக அதிமுக – பாஜக கூட்டணி என்னவாகும்? வெற்றி வாய்ப்பு எப்படி? முடிவுகள் எவ்வாறு அமையும்? எனப் பல்வேறு கேள்விகள் முன்வந்து நிற்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.