முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை பாராட்டு விழா நடக்கிறது. தமிழக அரசு சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை, 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அன்றையதினம் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (11-ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் முதல்வர், காலை 11 மணிக்கு பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹால் வளாகத்தில், மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்து கொள்கிறார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் செய்துள்ளார். அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால் ரோடு அருகே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
தமிழக அரசு சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை, 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து இவ்விழா நடக்கிறது. இவ்விழா நிறைவு பெற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 7 மணியளவில் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.