ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்பு: முதல்வர், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற

கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த திருமகன் ஈவெரா உடல் நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். பரபரப்பாக நடைபெற்ற இடைத் தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 43 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்தார். பிற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இன்று சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, முத்துசாமி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அதன் பின்னர் சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தற்போது சட்டமன்றத்துக்கு மீண்டும் சென்றுள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தற்போது செல்வப் பெருந்தகை பதவி வகித்து வரும் நிலையில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்த பதவி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.