திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது. இதனால் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் கருப்பு கொடியை காட்டி நேருவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் கடுப்பானார்கள்.
இதையடுத்து அந்த விழா நடந்த தெருவில் தான் திருச்சி சிவா வீடு இருக்கிறது. எனவே அப்போது விழாவை முடித்து அந்த வழியாக சென்ற நேரு அமைச்சர் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் 4 பேர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.
இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன், அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன், தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான்.
இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது , நான் ஓரி இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன், மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை.