கும்பகோணம் அருகே ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில்  ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை காப்பாற்ற சென்ற கணவரும்  படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக சிறப்பாக பணியாற்றியதற்கு பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு  ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த ஊராட்சி தலைவி சுமதி நேற்று முன்தினம்  மாலை மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டு அறை கதவை மூடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு கணவர் குணசேகரன் கதவை உடைத்து அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் படுகாயமடைந்தார். இருவரையும் அப்பகுதியினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊராட்சி தலைவி சுமதி  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நேற்று மாலை இறந்தார். குணசேகரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கபிஸ்தலம்  போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.