சென்னை: தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். இந்நிலையில், இந்தப் பக்கம் தற்போது ஹேக்கர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் சமூக வலைதள பக்கங்களில் ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தினை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். குழந்தை போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை முகப்புப் படமாகவும் வைத்தனர். அதோடு வியட்நாம் மொழியில் கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மார்ச் 28-ம் தேதி அன்று ஹேக் செய்யப்பட்டது. மற்றும் விரும்பத்தகாத சில பதிவுகளும் ஹேக்கர்களால் பகிரப்பட்டது. இப்போது, ரயில்வே அமைச்சகம், மின்னணுவியல் மற்றும் ஐடி அமைச்சகம் மற்றும் ஃபேஸ்புக் ஆதரவுடன், தெற்கு ரயில்வே ஃபேஸ்புக் பக்கம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஹேக்கர்களின் அக்செஸ் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவையும், கருத்தையும் தொடர்ந்து வழங்குங்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.