பாஜகவுக்கு பங்காளிகளே கிடையாது.. எல்லோருமே பகையாளிகள்தான்… அண்ணாமலை 'நறுக்'

திருச்சி:
ஊழல் பட்டியல் வெளியிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவுக்கு பங்காளிகள் என யாரும் கிடையாது.. எல்லோருமே பகையாளிகள்தான்” எனக் கூறியுள்ளார்.

திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறேன் என தமிழகத்தையே அதிர வைத்த அண்ணாமலை, நேற்று முன்தினம் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

அத்துடன் நிற்காமல், “ஊழல் என்று வந்துவிட்டால் அதன் அடிப்படையையே எதிர்க்க வேண்டும். ஒரு கட்சியை மாத்திரம் எதிர்க்கக் கூடாது.. எனவே தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் நான் வெளியிடுவேன்.. திராணி இருந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என பேசினார் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த பேச்சு, அதிமுகவுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் தொனியிலேயே இருந்தது. ஏனெனில், தமிழகத்தில் திமுக, அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன. இது, அதிமுகவினரை பெரிய அளவில் கொந்தளிக்க வைத்துள்ளது. இதுவரை அண்ணாமலையை பட்டும் படாமல் பேசி வந்த அதிமுக தலைவர்கள் சகட்டு மேனிக்கு விமர்சிக்க தொடங்கியுள்ளனர். நேற்று ஜெயக்குமார் தனது பேட்டியில், “அண்ணாமலைக்கு நான் சேலஞ்ச் விடுக்கிறேன்.. முடிந்தால் அவர் அதிமுக என சொல்லட்டும்.. அப்புறம் பாருங்கள் எங்கள் ரியாக்சனை” என கூறியிருந்தார்.

அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலையிடம் நிருபர் கேட்ட போது, “அவரை பற்றி பேசி பேசி பெரிய ஆளாக்காதீங்க.. அரசியல்வாதிகளுக்கு அரசியல் அடிப்படை தெரிய வேண்டும். அவரை பற்றி என்னிடம் கேட்காதீங்க.. முதிர்ந்த அரசியல்வாதிகள் பற்றி மட்டும் என்னிடம் பேசுங்கள்..” எனக் கூறினார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சிப்பது இதுவே முதல்முறை ஆகும். இதனால் இந்தக் கூட்டணி முறியப் போகிறது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “யார் ஊழல் செய்தாலும் அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதுதான் நியாயம். ஊழல் பற்றி பேசினால் அனைவரை பற்றியும் பேச வேண்டும். அப்போதுதான் மக்கள் மதிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடியும் அதைதான் விரும்புகிறார். அப்படிப்பட்ட அரசியைதான் மோடி எங்களை செய்ய சொல்லி இருக்கிறார். இந்த விவகாரத்தில் யாரையும் நாங்கள் பங்காளிகளாக பார்க்கவில்லை. பாஜகவுக்கு யாரும் பங்காளிகள் இல்லை.. அனைவருமே பகையாளிகள்தான்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.