பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 3 பேர் அவர்களை சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் அத்தீக் அகமதுவின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா நேற்று கூறியதாவது. தான் கொல்லப்பட்டாலோ அல்லது விபத்தில் சிக்கி இறக்கும் நிலை வந்தாலோ தான் கைப்பட எழுதியுள்ள கடிதத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உத்தரபிரதேச முதல்வருக்கும் அனுப்புமாறு அத்தீக் அகமது ஒருவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அந்தக் கடிதம் சீல் வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை அத்தீக் அகமது என்னிடம் தரவில்லை. அது வேறு ஒரு நபரிடம் கொடுக்கப்பட்டு அவர் மூலம் அனுப்பப்பட வேண்டும் என்று அத்தீக் அகமது தெரிவித்துள்ளார்.
அதன்படி அந்தக் கடிதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உ.பி. முதல்வருக்கும் சென்று சேரும். அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.
தான் விபத்தில் சிக்கினாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ இந்தக் கடிதம் அவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று சீல் வைத்த கவரில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் அத்தீக் அகமது. இவ்வாறு அவர் கூறினார்.