கோவிலுக்கு வழிகேட்ட இளைஞர்கள் – அசந்த நேரத்தில் பணப்பையை பிடுங்கிய சம்பவம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரைக்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் மனைவி அன்னலெட்சுமி. இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இவரது குழுவில் இருபது மகளிர் உறுப்பினராக உள்ளனர்.
இந்தக் குழுவுக்கு உள்ளூர் கூட்டுறவு வங்கியின் மூலம் கடன் வாங்கிக் கொடு்த்துள்ளார். அதற்கு மாதம் தோறும் குழு உறுப்பினரிடம் பணத்தைப் பெற்று அதனை அன்னலெட்சுமியே வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அன்னலெட்சுமி நேற்று மாலை வழக்கம் போல் குழுவில் இருக்கும் பெண்களிடம் பணத்தை வசூலித்துவிட்டு வந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அன்னலெட்சுமியிடம் அக்கா கோயிலுக்குச் செல்வது எப்படி என்று வழிகேட்டுள்ளனர். இதைக்கேட்டு குழம்பிப் போயுள்ளார். அப்போது, அவரது கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அன்னலெட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.