திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 44.60 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் மற்றும் போதை பொருட்கள் விமானம் மூலம் கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (46) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் 44.60 லட்சம் மதிப்பிலான 730 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.