ராமநாதபுரம் அருகே கடலுக்குள் கடத்தல்காரர்கள் வீசிச்சென்ற தங்கக்கட்டிகளை முத்துக்குளிக்கும் தொழிலாளர்களைக் கொண்டு சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திங்களன்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சுங்கத்துறையினர் நொச்சியூரணி கடற்கரைப் பகுதியில் கரையை நோக்கி வந்த படகை பிடிக்க முயற்சித்தனர்.
எனினும், அவர்கள் படகை சிறிய பாறையில் மோத வைத்து விட்டு தண்ணீருக்குள் குதித்து கரைக்கு சென்றனர்.
அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற படகில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், கடலுக்குள் கடத்தல்காரர்கள் மேலும் தங்கக்கட்டிகளை வீசிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.