கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தம் சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி பணியாற்றுகின்றனர். தனியார் பேருந்துகளின் கட்டணம் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இருப்பதால் சொந்த ஊருக்கு செல்லும் முடிவை தள்ளிப் போடுவதும், தவிர்ப்பதும் தொடர்ந்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுவதால் முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 1,078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்க பல்வேறு பயணச்சலுகை திட்டங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
10 சதவீத கட்டண சலுகை!
அந்தவகையில் ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலில் உள்ளது.
50 சதவீத கட்டண சலுகை!
ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு, அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படுகிறது. கடந்த மே 1ஆம் தேதி முதல் 50 சதவீத கட்டணச் சலுகை அமலில் உள்ளது.
பயனடைந்த பயணிகள்!
50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை (ஜூன் 22) 487 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் ரூ.1 லட்சத்து 8,586 சேமித்துள்ளனர்.
10 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 9,351 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பயணிகள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 632 சேமித்துள்ளனர். இவ்வாறு 2 சலுகை திட்டங்களின் மூலமாகவும் மொத்தமாகப் பயணிகளுக்கு ரூ.5.55 லட்சம் மிச்சமாகியுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.