ஒரு கிலோ தக்காளி ரூ.160 | பெட்ரோல் விலையை விஞ்சியதாக மக்கள் புலம்பல்: இன்றைய விலை நிலவரம்

விசாகப்பட்டினம்: தக்காளி விலை உயர்வால் நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதுமே பரவலாக தக்காளி விலை அதிகரித்துவரும் சூழலில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தக்காளி விலை, பெட்ரோல் விலையைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி புலம்பி வருகின்றனர்.

அதிகரித்து வரும் தக்காளி விலை குறித்து மத்திய அரசு, “இது வழக்கமான பருவகால பிரச்சினை. இன்னும் 15 நாட்களில் விலை குறைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளது. பல்வேறு நகரங்களிலும் தக்காளி விலை கிலோ ரூ.150-ஐ கடந்துள்ளது.

நகரங்கள் தக்காளி விலை ( 1 கிலோ)
சிலிகுரி (மேற்குவங்கம்) ரூ.155
மொரதாபாத் (உத்தரப்பிரதேசம்) ரூ.150
டெல்லி ரூ.110
கொல்கத்தா ரூ.148
சென்னை ரூ.117
மும்பை ரூ.58

நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் தக்காளி விலை சராசரியாக கிலோவுக்கு ரூ.83.29 என்றளவில் உள்ளது.

மாநில அரசுகள் நடவடிக்கை: அதிகரித்துவரும் தக்காளி விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் 82 நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்து வருகிறது. அதேபோல், மேற்குவங்க அரசும் சுஃபால் பங்ளா என்ற தனது நியாயவிலை காய்கறி அங்காடிகள், நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.