டெல்லி சென்றார் ஆளுநர்: அட்டர்னி ஜெனரலை சந்திக்கிறார்

சென்னை: ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், மத்திய அமைச்சர்கள், அட்டர்னி ஜெனரல் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக ஒருவார பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டால் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அன்றிரவே முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுத பரபரப்பு அடங்கியது.

அப்போது அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை ஆளுநர் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான முயற்சியில் ஆளுநர் இறங்கினார்.

இந்நிலையில், ஆளுநருக்கு தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்றநடவடிக்கைக்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டிருந்தார்.

ஆனால், இதற்கான கோப்புகள் வரவில்லை என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த சட்ட அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் கோப்புகளை பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்தச்சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் ஒரு வாரம் தங்கியிருந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலை சந்திக்கிறார். அப்போது அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியையும் சந்தித்து சட்ட விளக்கம் கோருவார் எனத் தெரிகிறது.

இதுதவிர, சட்ட நிபுணர்களைச் சந்தித்து செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.