மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முடியும்? அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழக நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது என்றார். மேலும் இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது என்ற அமைச்சர் மா சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை என்றார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு குறித்து கேட்கவில்லை என்றும் மா சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

குழந்தைகள் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கி விட்டோம் : அமைச்சர்!

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், 2028 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் 2023 ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி பெறும் பணிகள் நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 2028-ம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.