புதுடில்லி, பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முக்கிய குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி விக்ரம்ஜித் சிங் என்கிற விக்ரம் பிரார், ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து அழைத்து வந்தனர்.
பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாடகரும், அரசியல் பிரமுகருமான சித்து மூசே வாலா, அம்மாநிலத்தின் மான்சா என்ற பகுதியில், கடந்த ஆண்டு மே மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முக்கிய குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்டோரை கைது செய்தனர். மற்றொரு முக்கிய குற்றவாளியான கோல்டி பிரார், வட அமெரிக்க நாடான கனடாவில் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில், சித்து மூசே வாலா கொலை வழக்கில் தொடர்புடைய, மற்றொரு குற்றவாளியான விக்ரம் பிரார், மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பதுங்கி இருப்பது, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி களுக்கு தெரிய வந்தது.
இதன்படி அங்கு சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு, அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் உதவினர்.
இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விக்ரம் பிராரை கைது செய்து, அவரை ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, புதுடில்லிக்கு விமானத்தில் நேற்று அழைத்து வந்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார் உதவியோடு, நம் நாட்டில் ஆயுதங்கள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் விக்ரம் பிரார் ஈடுபட்டு வந்துள்ளார். 2020 முதல் தலைமறைவாக உள்ள இவர் மீது, 11க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்தபடி, லாரன்ஸ் பிஷ்னோயின் பயங்கரவாத கும்பலுக்கு, தகவல் தொடர்பாளராக இருந்துள்ளார். அவர்கள் வழிகாட்டுதலின்படி, பல்வேறு நபர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
மேலும், பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்வதற்கு, கோல்டி பிராருக்கு உதவி உள்ளார். கைது செய்யப்பட்டுள்ள விக்ரம் பிராரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்