நோம் பென், கம்போடியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பிரதமர் ஹுன் சென், 70, அப்பதவியில் இருந்து மூன்று வாரங்களில் விலகி, தன் மூத்த மகனை அமர வைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அமோக வெற்றி
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை, கம்போடிய மக்கள் கட்சி தலைவர் ஹுன் சென், கடந்த 38 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்.
இங்கு, பார்லிமென்டுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 125 இடங்களில், 120 இடங்களில் கம்போடிய மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதன் வாயிலாக, அந்நாட்டின் பிரதமராக ஹுன் சென் மீண்டும் பொறுப்பேற்றார்.
எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் தடையின்றி செயல்பட முடியாத சூழலில் இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா, ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும், வெளிநாட்டு உதவி திட்டங்களை இடை நிறுத்தம் செய்யும் தனி நபர்கள் மீது, விசா கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மூன்று வாரங்களில் விலகி, 45 வயதான தன் மூத்த மகன் ஹுன் மானெட்டை பிரதமர் பதவியில் அமர வைக்க உள்ளதாக, கம்போடிய பிரதமர் ஹுன் சென் நேற்று அறிவித்தார்.
பொறுப்பு
இது தொடர்பாக, மன்னர் நொரோடோம் ஷியாமோனியிடம் தகவல் தெரிவித்து விட்ட தாகவும், அவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஹுன் சென் தெரிவித்தார்.
ஆக., 22ல் பொறுப்பேற்க உள்ள புதிய அரசில், புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் பொறுப்புகளை வகிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்